×

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடம் கண்டறியப்பட்டால் அபராதம்

ஜெயங்கொண்டம்,அக்.23: ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடம் என கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் வினோத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிக்குட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு சிறப்பு பணி மாவட்ட பொதுசுகாதாரத்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சிறப்பு களப்பணியாளர்களை கொண்டு கொசுப்புழு ஒழிப்புபணி மற்றும் முதிர் கொசு ஒழிப்புப்பணி புகைமருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தினசரி நகராட்சி களப்பணியாளர் வருகையின் போது ஆய்வில் தெரிவிக்கப்படும் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றி உருவாகக்கூடிய கொசுபுழுக்களை அழிக்கலாம். மேலும் நகராட்சி நிர்வாகம், பொதுசுகாதாரதுறை மூலம் தினசரி முக்கிய இடங்களில் வழங்கப்பட்டு வரும் நிலவேம்பு குடிநீரை பருகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

தங்களது குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து 7 தினங்களுக்கு மேல் வீடு பூட்டியிருந்தால் இக்குடியிருப்பு வீட்டில் கொசுப்புழு உற்பத்தியாவதற்கும். இதனால் நோய் பரவுவதற்கும், வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.எனவே, இதுபோன்று பூட்டியிருக்கும் வீடுகள் இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருப்பு மனைகளாக பிரிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படாமல் காலிமனைகளில் உள்ள செடி, கொடி மற்றும் முட்புதர்களை தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அபராதம் விதித்து வசூலிக்கப்படும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வரும்போது கொசுப்புழு உற்பத்தியாகும் இடமெனக் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து வசூலிக்கப்படும். முதல் முறையாக இருந்தால் அபராதமும் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை இருந்தால் நீதிமன்ற மூலம் வழக்கு தொடரப்படும். எனவே நகராட்சி உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையுடன் பராமரித்து டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jeyankondam ,areas ,
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்