×

கூலி தொழிலாளிக்கு சரமாரி வெட்டு பிரபல ரவுடிகள் கைது: பட்டா கத்திகள் பறிமுதல்

வியாசர்பாடி, அக். 23: சென்னை வியாசர்பாடி சி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் மன்னன் (28). கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் மன்னன், அதே பகுதியில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து  சென்றார். அப்போது, அங்கு வந்த 2 பேர், அவரை மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுதொடர்பாக, வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சி கல்யாணபுரத்தை சேர்ந்த அரவிந்த் (26), சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தமிழரசன் (28) ஆகியோர் மன்னனை வெட்டியது தெரிந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் மீது கொலை,  அடிதடி, வழிப்பறி உள்பட பல வழக்குகள் உள்ளதும், வழக்கறிஞர் ரவி கொலையில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் பிரேம்குமார்  தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 2 பேர் பதுங்கி  இருப்பது தெரிந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை,  அங்கு பதுங்கி இருந்த 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டா கத்திகளை பறிமுதல்  செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : wage worker ,Patta ,gangsters ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி