×

அரக்கோணம், பேர்ணாம்பட்டு அருகே பயங்கரம் ஒரே நாளில் விதவை, தொழிலாளி உட்பட 3 பேர் கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

அரக்கோணம், அக்.23: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(30), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு லட்சுமி (27) என்ற மனைவியும், 4ம் வகுப்பு படிக்கும் கோகுல்(9), 2ம் வகுப்பும் படிக்கும் சூர்யா(7) என்ற மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கட்டில் மீது படுத்திருந்த பிரபு தவறி கீழே விழுந்து மயக்கமானதாக கூறி மனைவி லட்சுமி மற்றும் அக்கம் பக்கத்தினர், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பிரபுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் அரக்கோணம் அரசு மருத்துவமனை சென்று பிரபுவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது பிரபுவின் கழுத்தை நெரித்தது போன்ற அடையாளம் இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது மனைவி லட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை பிரபு அடித்து துன்புறுத்தியுள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டபோது பிரபு மனைவியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, கையிலிருந்த துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக பிரபு இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கொலை வழக்குபதிவு செய்த போலீசார் லட்சுமியை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர். மற்றொரு கொலை: அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை காந்திநகரை சேர்ந்தவர் செல்வி(30). தணிகைபோளூர் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் பாபு சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு 1ம் வகுப்பு படிக்கும் காந்த்(6) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தூக்க கலக்கத்தில் இருந்த காந்த், பக்கத்தில் படுத்திருந்த தனது தாய் செல்வியின் ஆடைகள் கலைந்திருப்பதையும், வாய், காது பகுதிகளில் ரத்தம் வடிந்து மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.

பின்னர், பக்கத்து வீட்டில் உள்ள தனது தாத்தாவிடம் சென்று தெரிவித்தான். இதையடுத்து அவர் விரைந்து வந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் செல்வியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, செல்வி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் சிம்பா துப்புதுலக்க விடப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்ற விட்டது. போலீசார் வழக்குப்பதிந்து செல்வியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டிஎஸ்பி துரைப்பாண்டியன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு அவர்கள் கொலையாளியை தேடி காஞ்சிபுரம் சென்றுள்ளனர்.

பேரணாம்பட்டு: ேபரணாம்பட்டு கலைஞர் நகரில் அப்பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான லேத்பட்டறையில் நேற்று காலை 10 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண் பேரணாம்பட்டு அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்த சிங்காரம் மனைவி லலிதா(50) என்பது தெரிய வந்தது. இவரது கணவர் இறந்து விட்டதால், குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகள், கவர்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும், இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது மகன் திருப்பத்தூரில் உள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் லலிதா மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருக்க முடியாமல் இங்கேயே திரும்பி வந்து குப்பைகள் சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவு அவரை மர்ம ஆசாமிகள் தலையில் கல்லைப்போட்டு கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷ்பாபுவின் உத்தரவின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து லலிதாவை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : widow ,Ararna ,
× RELATED விதவையர் நலவாரியம் கூட்டமைப்பு கோரிக்கை