திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக பிரசித்தி பெற்ற திருத்தலம். இங்கு, ஆடித்திருவிழா, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நிறைவு நாளில் சிறப்பு பூஜை நடைபெறும். சித்திரை பிரமோற்சவம், மாசி பிரமோற்சவம், கந்தசஷ்டி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடக்கும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோயிலில் ராஜகோபுரம் கட்டவேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
2009ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மு.ஈஸ்வரப்பன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் முயற்சியோடு இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி 25 அடி அடிதளம், 11 அடி கல் ஆரம் என 122 அடி உயரம் கொண்ட 9 நிலை ராஜகோபுரம் அமைக்கவும், பணி முடிந்த பிறகு 2011ல் கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ராஜகோபுரம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பாக தினகரன் இதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து 2017ல் ராஜகோபுர பணியை தொடங்க தக்கார் ஜெய்சங்கர் முயற்சி மேற்கொண்டார். அதன்பயனாக 2017ல் ராஜகோபுரம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இப்பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது கோபுரத்திற்கு மின்விளக்கு வசதி, சிலைகள் அனைத்துக்கும் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
365 படிகள் மாற்றி அமைப்பு
சரவணப்பொய்கை திருக்குளத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் வகையில் 365 படிகள் உள்ளது. தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருவதால் 365 படிகளை
யும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக மலைக்கோயிலில் உள்ள தேர்வீதி வழியாக கோயிலுக்கு செல்லும் வகையில் படி அமைக்கப்பட்டு வருகிறது.