×

இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி, அக்.17: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க கோரி அவரது உறவினர்கள் தூத்துக்குடி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், கோரத்துமுனியன், இசக்கிமுத்து ஆகிய 8 பேர் கடந்த ஆக.18ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் ஆக.21ம் தேதி கைது செய்து அங்குள்ள புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீர்க்கொழும்பு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கல்பட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதமும், வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் அளித்து  உத்தரவிட்டார். இதனை அடுத்து மீனவர்கள் 8 பேரையும் புத்தளம் சிறையில் அடைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று மாலை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து 8 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கண்ணீர் மல்க மனு அளித்தனர். இதுகுறித்து அரசிற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Tags : petitioners ,collector ,fishermen ,prison ,Sri Lanka ,Tuticorin ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...