கோவில்பட்டி, அக். 17: கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் அவரது 219வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்டபொம்மனின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீ டூ பிரச்னை நாடு முழுவதும் எழுந்துள்ளது. சில நேரம் அது தவறுதலாக பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதால் ஆராய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, மத்திய அரசு சட்டம் இயற்றினால், அதன் வழியாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்கவில்லை, ஜல்லிக்கட்டு, ஜி.எஸ்.டி, காவிரி பிரச்னை என மாநிலத்தின் பல்வேறு உரிமைகளை இந்த அதிமுக மீட்டெடுத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இவரை போல் யார் அரசியல் கட்சிகளை தொடங்கினாலும் திமுக மற்றும் அதிமுகவை விமர்சிக்காமல், அவர்களால் கட்சி நடத்த முடியாத நிலை ஏற்படும்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் புயல் மற்றும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த அறிக்கை அடிப்படையில் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.