புதுச்சேரி, அக். 17: புதுவை தியேட்டரில் கலாட்டாவில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட தியேட்டர் ஊழியரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 வாலிபர்களை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். புதுவை, ஆலங்குப்பம், அன்னை நகர், அம்பேத்கர் வீதியில் வசிப்பவர் இருசப்பன் மகன் சிலம்பரசன் (22). காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் விநியோகஸ்தராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த தியேட்டருக்கு வந்த 3 வாலிபர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்தபடி கலாட்டாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் சிலம்பரசிடம் முறையிடவே, 3 பேரையும் அவர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், தியேட்டர் ஊழியர் சிலம்பரசனை ஆபாசமாக திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து கோரிமேடு போலீசுக்கு சிலம்பரசன் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், எல்லைபிள்ளைச் சாவடி புண்ணியமூர்த்தி என்ற அருண் (26), குண்டுபாளையம் ஸ்ரீனிவாசன் (23), தட்டாஞ்சாவடி சங்கர் என்ற கமல் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளிகளான 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.