×

தியேட்டர் ஊழியரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல்: 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி,  அக். 17:   புதுவை தியேட்டரில் கலாட்டாவில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட  தியேட்டர் ஊழியரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 வாலிபர்களை  கோரிமேடு போலீசார் கைது செய்தனர். புதுவை, ஆலங்குப்பம், அன்னை நகர்,  அம்பேத்கர் வீதியில் வசிப்பவர் இருசப்பன் மகன் சிலம்பரசன் (22). காமராஜர்  சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் விநியோகஸ்தராக பணியாற்றி  வருகிறார். நேற்று முன்தினம் அந்த தியேட்டருக்கு வந்த 3 வாலிபர்கள்  பெண்களை கேலி கிண்டல் செய்தபடி கலாட்டாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் சிலம்பரசிடம் முறையிடவே, 3  பேரையும் அவர் தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும்,  தியேட்டர் ஊழியர் சிலம்பரசனை ஆபாசமாக திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல்  விடுத்தார்களாம். இதுகுறித்து கோரிமேடு போலீசுக்கு சிலம்பரசன் தகவல்  கொடுத்தார். விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான  போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்,  எல்லைபிள்ளைச் சாவடி புண்ணியமூர்த்தி என்ற அருண் (26), குண்டுபாளையம்  ஸ்ரீனிவாசன் (23), தட்டாஞ்சாவடி சங்கர் என்ற கமல் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளிகளான 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : volleyball employee ,youths ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...