×

ஜலகண்டாபுரத்தில் பள்ளி சென்ற மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது

ஜலகண்டாபுரம், அக்.17: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவிகள், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். தினமுன் காலை மற்றும் மாலை நேரங்களில் அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு படிக்க செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை அருகில் வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டு கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை டியூசன் செல்லும்போது மாணவி ஒருவரின் தாயார் பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளார்.

அப்போது, அரசு மருத்துவமனை அருகில் நின்று கொண்டிருந்த பெரியசோரகை பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் கிருஷ்ணராஜ் என்பவர் மாணவிகளை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் தட்டிக்கேட்டதால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மற்ற மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : school ,Jalakandapuram ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி