மணப்பாறை, அக்.16: மணப்பாறையில் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மணப்பாறை-மதுரை ரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி அருகே தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாறைபட்டி நாட்டாண்மை பெரியசாமி தலைமை வகித்தார். இடையபட்டி நாட்டாண்மை கஸ்தூரி மற்றும் திருப்பதி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் தமிழக இணை அமைப்பாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்றனர். மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.