காரைக்கால்,அக்.16: ரூ.10 ஆயிரம் பணத்துடன் மணிபர்சை தவற விட்ட பயணியிடம் பர்சை ஒப்படைத்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடந்துனரை பொதுமக்கள் பாராட்டினர்மதுரையை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (22). இவர் நேற்று காலை சென்னையிலிருந்து காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு செல்ல காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர் திருநள்ளாறு கோயிலுக்கு செல்ல, திருநள்ளாறு வழியாக மயிலாடுதுறை சென்ற புதுச்சேரி போக்குவரத்துக்கழக பேருந்தில் ஏறி திருநள்ளாற்றில் இறங்கியுள்ளார். தரிசனத்தை முடித்துவிட்டு பர்சை பார்த்த போது அதை காணமல் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் சென்னை செல்ல தயாரானார். அப்போது அவரது போனை தொடர்பு கொண்ட புதுச்சேரி போக்குவரத்துக்கழக ஓட்டுனர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் ஆனந்த்ராஜ், நீங்கள் பேருந்தில் தவறவிட்ட மணிபர்ஸ் எங்களிடம் பத்திரமாக உள்ளது காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
பின்னர் காரைக்கால் பேருந்து நிலைய உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு மற்றும் பேருந்து கண்ரோலர் கோபால கிருஷ்ணன் ஆகியோரிடம் பர்சை ஒப்படைத்தனர். அவர்கள் வெள்ளையப்பனிடம் ஒப்படைத்தனர். ரூ.10 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை பத்திரமாக இருந்தது, இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் நேர்யை பாராட்டினர்.