மன்னார்குடி, அக். 11: மன்னார்குடியில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் 29 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி மன்னார்குடியில் நடை பெற்றது. கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் விஜயா தொடக்கி வைத்தார். மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 29 அரசு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப் படுத்தினர். பாரம்பரிய உணவு முறைகள், அறிவியலின் அடிப்படை தத்துவங்களை விளங்கிடும் வகையில் மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு கருவிகளின் மாதிரிகள், புதிய வகை மின் உற்பத்தி போன்ற பல்வேறு படைப்புகள் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை பார்வையார்களுக்கு எடுத்துக் காட்டியது.
இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முரளி உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்று இக்கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர். அறிவியல் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கல்வி அலுவலர் விஜயா வழங்கினார். அறிவியல் கண்காட்சியை வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டி நடுவர்களாக ஆசிரியர்கள் கமலப்பன், அன்பரசு, ராஜப்பா, ஆகியோர் செயல்பட்டனர்.