செங்கல்பட்டு, அக். 11: செங்கல்பட்டு திமுக நகரச் செயலாளர் நரேந்திரன் தசரா விழா குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா, செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு சின்னக்கடை வீதியில் நவராத்திரியை ஒட்டி 10 நாட்கள் தசரா விழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழவை ஒட்டி நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாமல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மிகப்பெரிய ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ராட்டினம் அமைத்திருக்கும் இடம் குப்பைகள் இருந்த பகுதியாகும் எனவே அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது. தசரா விழா நடைபெறும் இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லை.
பொதுமக்கள் வசதிக்காக மொபைல் டாய்லெட் குடிநீர் வசதிகள் மற்றும் தினசரி குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ராட்டினம் அருகில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கிறது. தசாரா நடைபெறும் இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிவதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. விழாக்களில் சூதாட்டம், கேம்ளிங், சுனோபால் ஆகியவற்றை தடுக்க வேண்டும், சுகாதாரமற்ற உணவுகள், குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. அவற்றை தடுக்க வேண்டும். சுகாதாரத்துறை, பாதுகாப்புத்துறை, தீயணைப்பு துறை நகராட்சி ஆகியவை உரிய ஆய்வு செய்ய வேண்டும். என்று மனுவில் கூறியுள்ளார்.