×

இப்ப விழுமோ.. எப்ப விழுமோ... ஒட்டன்சத்திரத்தில் மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம், அக். 10: ஒட்டன்சத்திரத்தில் சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி 12வது வார்டுக்குட்பட்டது பழனிக்கவுண்டன்புதூர். இங்குள்ள மின்மயானத்திற்கு செல்லும் வழியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் உள்ளன. 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தோட்டத்து சாலை அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாய நிலங்களில் 30க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு மின்கம்பம் சில மாதங்களுக்கு முன்பு சாயும் நிலையில் உள்ளது. தற்போது இருபுறமும் எர்த் கம்பியின் பிடிமானத்தில் தான் மின்கம்பமே தாங்கி நின்று கொண்டிருக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து சென்று வருகின்றனர். மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்துதான் வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இம்மின்கம்பம் சாய்ந்தால் மின்விநியோகம் தடைபடும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்