தூத்துக்குடி, அக்.10: தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டரிடம் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராமலெட்சுமி ஆகியோர் தலைமையில் உப்பள தொழிலாளர்கள் அளித்து மனு: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில், உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிவாரண நிதியுதவி வழங்கவில்லை. எனவே, உப்பளத்தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கவும், அவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்கவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உப்பளங்களை பெண் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விட்டு அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.