துறையூர், அக்.9: முதியோர்களுக்கு உதவித்தொகையை நிறுத்தியதை கண்டித்து துறையூர் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வடக்குப்பட்டி கிராமத்தில் முதியோர் உதவித்தொகை பெற்று வந்த 27பேருக்கு திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளான வடக்குப்பட்டியில் கொடுத்த பென்ஷனை பறித்து மூத்த குடிமக்களை இழிவுபடுத்தும் அநியாயம், சாக்குசொல்லி மூத்தகுடிமக்களின் பென்ஷனை நிறுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் , நிறுத்தப்பட்ட காலத்திற்கும் சேர்த்து உடனே பென்ஷன் வழங்க கோரி கோஷமிட்டு முதியோர்களும், அகில இந்தியவிவசாய தொழிலாளர் சங்கத்தினரும் காத்திருக்கும் போராட்டத்தில ஈடுபட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ஆனந்தன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.