காஞ்சிபுரம், அக்.9: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமினை திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ ஆகியோர் வாக்குத் சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், ஆலந்தூர்(பகுதி), சோழிங்கநல்லூர் (பகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 2289 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல், இறந்த - இடம் மாறிய வாக்காளர்களை நீக்கல் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்க்கான 3வது சிறப்பு முகாம் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் கார்லி அரசு மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி, மேற்கு தாம்பரம் சேவா சதன் அரசு மேல்நிலைப் பள்ளி, காந்தி சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளி, செவன்த்டே அட்வெண்டைஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் பெரும்புதூர் தொகுதி படப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஊராட்சி பொறுப்பாளர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பம்மல் ஜெய ஜெய சங்கரா மேல்நிலைப் பள்ளி, நாகல்கேணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, திருநீர்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, லட்சுமிபுரம் ஜெய முத்துகுமாரசுவாமி மேல்நிலைப் பள்ளி, துர்கா நகர் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரத்தில் உள்ள குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு மேல்நிலைப் பள்ளி, பரங்கிமலை கண்டோன்மெண்ட் டோம்னிக்ஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது நகரச் செயலாளர்கள் வே.கருணாநிதி, இரா.நரேஷ்கண்ணா, பாபு, தமிழ்குமரன், பேரூர் செயலாளர் ஜெயகுமார், ஜி.காமராஜ், ஏ.கே.கருணாகரன், எஸ்.சதீஷ், இரா.விஜயகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.