×

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘எனக்கு வயது 24. என் இடது தோள்பட்டையிலும் அடிப்புற புஜத்திலும் இரண்டு கொழுப்புக்கட்டிகள்  (லைப்போமா) உள்ளன. என் தந்தைக்கும் இந்தப் பிரச்னை இருந்தது.  ‘‘அவற்றால் வலியோ பிரச்னையோ இல்லாத வரை நீக்க வேண்டாம்” என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு அதை நீக்கினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. கொழுப்புக்கட்டிகளை நீக்கலாமா? எதனால் இவை ஏற்படுகின்றன?”
 - டேனியல் தர்மராஜ், சின்ன சேலம்.

‘‘கொழுப்புக்கட்டிகள் என்பவை தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புத்திசுக்களின் திரட்சியால் உருவாகின்றன.  பரம்பரை காரணமாக சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. சிலருக்கு ஒரு இடத்தில் தோன்றினால், வேறு இடங்களிலும் பரவ வாய்ப்பு உள்ளது.  இந்தக் கொழுப்புக்கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுமோ என்று சிலர் அஞ்சுகிறார்கள். அப்படி அச்சப்படத் தேவை இல்லை.

பெரும்பாலானவர்களுக்கு லைப்போமா கட்டிகளால் எந்த தீங்கும் நேர்வது இல்லை. பொதுவாக,தோற்ற அழகைக் கெடுக்கிறது என்பதற்காகவே இவை நீக்கப்படுகின்றன. அணியும் ஆடைகள் உருத்துவதாலும், ஏதேனும் பொருட்களில் மோதும்போது சிராய்ப்பு, காயம் ஏற்படுவதாலும் சிலருக்கு நீக்க வேண்டியது இருக்கும்.  கொழுப்புக்கட்டிகளை எளிய அறுவைசிகிச்சை மூலமே நீக்கிவிடலாம். உங்களுக்கு அடிப்புற புஜத்திலும் தோள்பட்டையிலும் இருப்பதாக சொல்கிறீர்கள். அந்த இடத்தில் சிக்கலான நரம்புகள் நிறைய உள்ளன என்பதால் அறுவைசிகிச்சை செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். அறுவைசிகிச்சை செய்யத்தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், தேர்ந்த அறுவைசிகிச்சை நிபுணரிடம் பரிசீலித்து சிகிச்சை பெறுவது நல்லது.”

எனக்கு எண்ணெய் பசை சருமம் உள்ளது. இதை எப்படிப் பராமரிக்க?

எண்ணெய் பசை உள்ள சருமம்  தன்னம்பிக்கையையே குலைப்பது. இது, வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது. முகத்தில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பதுதான் எண்ணெய் பசை உள்ள சருமத்துக்கு காரணம். பாரம்பரியம் உள்ளிட்ட சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும் சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய் பசை உள்ள சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.

1. சோப்பு மற்றும் கிளென்ஸர்கள்

சிலவகை சோப்புகள் மற்றும் கிளென்சர்கள் காரத்தன்மை அதிகம் உள்ளவையாக, கடினமானவையாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதால், சருமம் மிகவும் உலர்வாகி மீண்டும் சீபம் அதிகமாகச் சுரக்கும். எனவே,  எண்ணெய் பசை சருமத்துக்கான பிரத்யேகமான சோப்புகள் மற்றும் கிளென்ஸர்கள் எதுவென அறிந்து அவற்றைப் பயன்படுத்துங்கள்.

2. ஃபேஷியல் மாஸ்க்

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.

3. இரண்டு முறைக்கு மேல்முகத்தைக் கழுவாதீர்


பொதுவாக, எண்ணெய் பசை உள்ளவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இப்படி செய்வதால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால், ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.

4. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

எண்ணெய் பசை சருமம் என்று மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் அதிகம். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய்பசை சருமத்துக்கான பிரத்யேக மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம்.

5. அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள்

எண்ணெய் பசை உள்ள சருமத்தினருக்கு முகப்பருவால் பாக்டீரியா இருக்கும். நம் கைகள் மோசமான பாக்டீரிய கடத்திகள்.  இதைக்கொண்டு அடிக்கடி முகத்தை தொடும்போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தொற்று பரவிக்கொண்டே இருக்கும். எனவே, அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள். ஒருமுறை முகத்தைத் தொட்டதும் கை கழுவுங்கள்.

Tags : Muthiah ,
× RELATED கவுன்சலிங் ரூம்