×

உடல்பருமனும் மனச்சோர்வும் vs தடுப்பு முறைகளும் சிகிச்சைகளும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனம் எனும் மாயலோகம்!

உடலின் எடை கூடுவதற்கு (பிற காரணங்களால் ஏற்படும்) மன உளைச்சல் ஒரு காரணம் என சென்ற இதழில் பார்த்தோம். இது ஒருவரின் உணவுப் பழக்கங்களை வெகுவாக பாதிக்கிறது. சிலர் சரியாக உண்ணாமல் இருப்பதால் உடல் எடை குறைகிறது. சிலர் அளவில்லாமல் உண்பதால் உடல் எடை கூடி உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமனால் மேலும் மன உளைச்சல் உண்டாகிறது. இதனை ஒரு vicious cycle என்றே கூறலாம்.

வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை கையாள்வதற்கு தக்க coping mechanism அறியாமல் மனம் இவ்வாறு emotional eating மூலம் அந்த stress யை தணித்துக் கொள்ள முயல்கிறது. ஒருவரின் அன்றாட உணவுப்பழக்கத்தில் அசாதாரண மாற்றங்கள் நிகழும் போது அதனை அசட்டையாக விடக்கூடாது. ஏனெனில் பழக்கங்கள் நாளுக்கு நாள் வலுவடையும் இயல்புடையவை. உடல் எடை கூடும் போது கவனிக்காமல் விட்டுவிட்டால் அது உடல் பருமனாக மாற்றமடைந்து விடுகிறது.

உடல் பருமன் மற்றும் டிப்ரஷன் ஏற்படுவதற்கு stress ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் sedentary lifestyle, அதாவது அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது, சுறுசுறுப்பாக இயங்காத வாழ்க்கை முறை என ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன. திடீரென உடல் எடையில் மாற்றங்கள் நிகழும் போது நீங்கள் உடனடியாக உங்கள் பொது மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். அவர் முழு உடல் பரிசோதனைக்கு பரிந்துரைத்து, காரணங்களை கண்டறிந்து, அதற்குத்தக்கவாறு உங்களுக்கு வழிகாட்டுவார்.

உடல் பருமனோ மனச்சோர்வோ ஏற்படும் முன் தடுப்பதற்கான வழிமுறைகளில் நம் அன்றாட வாழ்க்கை முறை பெரும் பங்காற்றுகிறது. நல்ல உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி, போதிய தூக்கம், (sleep hygiene) பெரும் stress இல்லா பணி - இவையாவும் முக்கியமான காரணிகளாக விளங்குகின்றன. மனச்சோர்வினால் ஒருவருடைய தனிநலமும் வாழ்க்கைத் தரமும் குன்றுவது மட்டுமில்லாமல், “சிகிச்சை பெற வேண்டும்” என உந்துதல் கூட இருக்காது.

மேலும் மருத்துவர் அறிவுறுத்தும் சிகிச்சை வழிமுறையையும் அவர் பின்பற்ற இயலாது. ஆகவே சிகிச்சையில் முதல் படியாக மனநல நிபுணரை அணுகி ஆலோசனை பெறும் போது, முதலில் டிப்ரஷன் சரியாகும். இதன் வழியே உண்டாகும் மனமாற்றம் ஒருவரை உடற்பயிற்சி செய்யவும் சுறுசுறுப்பாக வேலைகளை செய்யவும் முனைப்பை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். இது நல்லுணவுகளை தேர்வு செய்யவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும் ஊக்கம் அளிக்கும்.

இரண்டு பிரச்சினைகளுக்கும் சுறுசுறுப்பாக இருப்பதும், நண்பர்களுடன் கலந்துரையாடுவதும், சிகிச்சையாளர் பரிந்துரைக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதும் பயனளிக்கும். ஒருங்கிணைந்த தொடர் சிகிச்சை முறைகளே இதற்கு பலனளிப்பதாக இருக்கும். ஒரு பிரச்சனைக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் போது அது மற்றொன்றை மறைமுகமாக பாதிக்கக் கூடும். எனவே இரண்டு பிரச்சனைகளுமே தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

தொடர் சிகிச்சை முறைகள் பலன் அளிக்க சற்று காலம் எடுத்துக் கொள்ளக்கூடும், ஆனாலும்  விடா முயற்சியுடன் பின்பற்றும் போது நிச்சயம் அது வெற்றி அளிக்கும். அதீத உடல் எடையைக் குறைக்க சரியான உணவுத் தேர்வு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றுவதுடன் மனநலத்திற்கு Behavioural therapy, Cognitive Behavioral Therapy, Hypnotherapy போன்ற சிகிச்சை முறைகளும் பலன் அளிக்கக் கூடியவை.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சரியான எடையை பராமரிப்பது அவசியம். தகுந்த ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்தாலோசித்து உங்களுக்குத் தேவையான கலோரிகளைக் கண்டறிந்து, சத்தான உணவுத் திட்டத்தை உருவாக்குவது ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் அவசியம்.ஆரோக்கியமான கொழுப்புகள், கொட்டைகள்(பாதாம், வால்நட் போன்றவை), விதைகள்( சியா, சூரியகாந்தி விதைகள்) மீன், முட்டை, சோயா, முழு தானியங்கள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

நீச்சல், வேக நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை தினமும் அரை மணி நேரமாவது செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்ற மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கும் பழக்கத்தை கொண்டிருத்தல் நலம்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்