சென்னை: வட மாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒன்றிய அமைச்ச்ர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். சென்னையில் இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் நேற்று(2ம் தேதி) நடைபெற்றது. இதில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். பின் ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பிடிக்கும். இந்தியாவில் பாஜ சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பலர் கூறுகின்றனர் ஆனால், அப்படி இல்லை.
அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரே கட்சி பாஜ தான். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் அம்பேத்கருக்கு மிகப்பெரிய சிலை வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன். தமிழகத்தில் கலப்புத் திருமணத்தால் ஏற்படக்கூடிய சாதிய மோதல்கள் கொலைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த முதல்வர் முன்வர வேண்டும். தற்போது வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தலித் கட்சிகளுக்காக திருமாவளவன்,கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உள்ளனர் இவர்கள் ஒன்றிணைந்து இந்திய குடியரசு கட்சியுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.