சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நன்னிலம் எம்எல்ஏ காமராஜ் (அதிமுக) பேசுகையில், சோழவள நாட்டில் பஞ்ச ஆரண்யங்கள் என்று 5 திருத்தலங்கள் இருக்கிறது. அதில் 2வது தலமான அவளிவநல்லூர் சட்டநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு பணிகள் தொடங்கும் சூழ்நிலை இருக்கிறது. ஆலங்குடி பகுதியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிற அதே பகுதியில், அபய வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இந்த பெருமாள் கோயிலுக்கு மொட்டை கோபுரம் தான் இருக்கிறது. அதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், உறுப்பினர் கோரிய குடமுழுக்கிற்குண்டான திருப்பணி வருகிற 16ம் தேதி பாலாலயம் செய்யப்பட இருக்கிறது. சுமார் ரூ.34.30 லட்சத்தில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. வரதராஜ பெருமாள் கோயிலில் மொட்டை கோபுரம் இருப்பதாக தெரிவித்தார். 300 ஆண்டுகள் பழமையான கோயில் என்பதால் தொல்லியல் வல்லுநர் குழுவினரோடு ஆய்வு செய்து அந்த மொட்டை கோபுரத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின், 3 நிலை ராஜகோபுரமாக கட்டி தருவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சிக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட 7 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும், 5 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும், 3 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும் என்று 6 கோயில்களின் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. கடந்தாண்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் கோரிய ஒரு ராஜகோபுரத்தையும் சேர்த்து 7 கோயில்களுக்கு ரூ.36 கோடி செலவில் ராஜகோபுரங்கள் அமைக்க 2022-23ம் ஆண்டிற்கான அறிவிப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் காலத்தில் நடந்த திருப்பணிகளுக்கு இணையாக நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடந்து வருகிறது’’ என்றார்.