சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சிஎம்டிஏவின் 272வது கூட்டம் நடைபெற்றது. அதில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நேற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 272வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
இக்குழுமக் கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், மாநகர பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள முனையத்தில் எரிபொருள் நிரப்பும் மையம், பெருநகரப் பேருந்தின் பணிமனைக்கு அருகாமையில் இடம் அளிப்பது சம்பந்தமாகவும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்குழுமக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம் சிவக்குமார் (எ) தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர், கோவிந்த ராவ், நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன் குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
