விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.93 லட்சம் வரை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானுரை அடுத்த பாட்டானுர் பகுதியை சேர்ந்த காத்தலிங்கம் என்பவரின் மனைவி பூங்கொடி மகன் நிர்மல் குமார், மகள் மகாலக்ஷ்மி உறவினர் விக்னேஸ்வரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்திவருகின்றனர்.
அவர்களிடம் புதுச்சேரி மாநிலம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த இளங்கோவனின் மனைவி ஜோதி என்பவர் சீட்டுப்பணம் செலுத்தி வந்துள்ளார். ஜோதி உள்பட 23 பேர் முகவர்களாக செயல்பட்டு வானூர், பட்டானுர், வசந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1069 பேரிடமிருந்து நகை சீட்டு, மளிகை பொருட்கள் சீட்டு, பணசீட்டு என ரூ.93 லட்சத்து 55 ஆயிரம் வசூலித்து பூங்கோடியிடம் கொடுத்துள்ளனர்.
சீட்டு காலம் நிறைவுபெற்ற பிறகும் பணத்தை திருப்பி தராமல் 5 பேரும் தலைமறைவானதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் பூங்கோடியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்.