×

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேகமாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேகமாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதற்கு பதில் அளித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:

* அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு என தனியாக 4 பிரத்யேக இருக்கைகள் ஒதுக்கப்படும்.

* அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வு அறைகளுக்கு குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் நகரில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும்.

* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் ஆவடி பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம், பாடியநல்லூர் பேருந்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.

* அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகளில் இளைஞர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள் வழங்கப்படும்.

* அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சலுகை அறிமுகப்படுத்தப்படும்.

* அரசு போக்குவரத்து கழகங்களில் பணிமனை அளவில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

* அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

* தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பிரித்து ஆலங்குளம் தாலுக்காவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பிரித்து ராஜபாளையம் தாலுக்காவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும்.

* பொதுமக்கள் நலன் கருதி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54  மோட்டார் வாகன் ஆய்வாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய மொத்தம் 145 அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு 145 எண்ணிக்கையில் இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள 20 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத்தளம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதல் தொகையாக ரூ.5000 வழங்கப்படும்.

* ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வராமலேயே சேவைகளை குடிமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் பொதுப்பணி வில்லை பெறாமலேயே இயக்க வசதியாக 1989ம் ஆண்டு தமிழ்நாடு மோட்டர் வாகன சட்டம்படி விதிகள் 7,8,9,10 ஆகியவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க தனியார் பங்களிப்பின் மூலமாக தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government Quick Transport Corporation ,Minister ,Sivasankar , 4 seats to be reserved exclusively for women in Govt Rapid Transport Corporation buses: Minister Sivashankar's announcement
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...