பெங்களூரு: லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பாவுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது என பாஜகதொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விருபாக்சப்பா நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராக விருபாக்சப்பாஉள்ளார் . இவர் லஞ்சம் பெற்ற வழக்கில் நேற்று முன்தினம் இரவு லோகாய்த்த போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டர். அவரை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சன்னகிரி தொகுதி பாஜக உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் பெங்களூருவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தர்ணா விருபாக்சப்பாவுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இடமளிக்க கூடாது என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு கட்சி தலைமை இது குறித்து இறுதியான முடிவு அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் நடைபெறும் என பாஜக தொண்டர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டதின் காரணமாக பாஜக கட்சி அலுவலகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.