சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று சரியான நிலையில், சில நாட்களுக்கு முன் சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நான் நலமுடன் இருக்கிறேன். சீக்கிரமா வீடு திரும்புவேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் மீண்டும் இளங்கோவனுக்கு கடந்த 26ம் தேதி காலை மீண்டும் அவருக்கு கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஐசியு பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதுடன் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

