சென்னை: பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொடர்பு வழியை கடந்து புகார் தெரிவிக்கும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் அனைத்து துறை பணியாளர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் படி அரசு ஊழியர் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உயர் அதிகாரி அல்லது அலுவலக தலைவர் மூலமே நிவிர்த்திசெய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் பலரும் நேரடியாகவோ அல்லது தொழிற்சங்கங்கள் மூலமாகவோ பிரதமர், அமைச்சர், எம்.பிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பிவருவதாக அதில் சுட்டிக்காட்ட பட்டுள்ளது. இது ஜிப்மருக்கு பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொடர்பு வழிகளை கடந்து செல்லும் நடைமுறையாகும் எனவே ஊழியர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முறையான வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.