டெல்லி: லட்சத்தீவு எம்பி ஃபைசலை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த ஒன்றிய அமைச்சர் பி.எம்.சமீதின் மருமகன் முகமது சாலிக்கை கொல்ல முயன்றதாக ஃபைசல் மீது புகார் எழுந்தது. கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கவரட்டி நீதிமன்ற தீர்ப்பளித்தது. கவரத்தி அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால் எம்பி பதவியிலிருந்து ஃபைசல் நீக்கப்பட்டார். கேரளா ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்ததால் லட்சத்தீவு தொகுதி இடைத்தேர்தல் வாபஸ் ஆனது. முகமது ஃபைசல் வழக்கு தொடர்ந்ததையடுத்து 10 ஆண்டு சிறை தண்டனைக்கு கேரள ஐகோர்ட் தடை விதித்தது.
எனினும், தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யாததால் முகமது ஃபைசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இடைக்கால தடை விதித்து 2 மாதமாகியும் தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறவில்லை. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் ஜனவரி 25ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எம்பி பதவி தகுதி நீக்கம் ரத்தாகியுள்ளது. லட்சத்தீவுகள் தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றது.இதனால் மீண்டும் எம்.பியாக தொடரலாம். அவருக்கான சலுகைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை பெறலாம். அப்படி செய்தால் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டு மீண்டும் எம்.பி பதவியை ராகுல் காந்தி பெற முடியும். ஆனால் இதுவரை ராகுல் காந்தி தரப்பிலோ, காங்கிரஸ் கட்சி தரப்பிலோ மேல்முறையீட்டிற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. 30 நாட்கள் கால அவகாசம் வழங்கிய நிலையில் தீவிர ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.