திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பிரசித்தி பெற்றது இந்த திருத்தலமாகும். இதன் கீழ், திருவலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில், வேணுகோபால சுவாமி கோவில், நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டை ஆறுமுகசாமி கோயில், விஜயராகவ பெருமாள் கோயில், வீராடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 29 உப கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடைநிலை முதல், முதுநிலை வரை பணியாற்றி வருகின்றனர். இதில், உள்துறை மற்றும் வெளித் துறை என்று இரண்டு பிரிவுகளாக கோயில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்கள் கடந்த சில வருடங்களாக திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயாவிடம், ஏழாவது ஊதிய உயர்வு குழுவை பரிந்துரையை அமல்படுத்த வேண்டி, பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தும் அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்த ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை ஏற்று, உடனடியாக மற்ற கோயில்களில் நடவடிக்கை எடுத்தது போல், திருத்தணி முருகன் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் நடவடிக்கை எடுத்து சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற கோயில் ஊழியர்களும் அலுவலர்களும் பங்கேற்று இவர்கள் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.