சேலம்:சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர், சேலம் 4 வது நீதித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2022 மார்ச் 1ம் தேதி நீதிமன்ற அலுவலகத்தில் இருந்த மாஜிஸ்திரேட் பொன்பாண்டியை உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தியுள்ளர். அஸ்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், பிரகாஷ் மேட்டூரில் இருந்து ஓமலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சேலம் நீதிமன்றத்திற்கு உடனடியாக அவர் மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்றுதான் ஊழியர் பிரகாஷ், சேலம் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றார். தன்னை தொடர்ந்து மாற்றுவதால் ஆத்திரம் அடைந்த அவர் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த அஸ்தம்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ரவி விசாரித்து, மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய உதவியாளர் பிரகாஷிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.