×

பொன்னேரி அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி அருகே வியாபாரி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் தங்கசெயின் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கதிரவன்(46). இவர், மீஞ்சூர் அரியன்வாயல் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு, மசாலா பொருட்கள் வைத்து கொண்டு, தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு  வழக்கம் போல வீட்டிற்கு காலையில் வந்தபோது, அரியன்வாயல் பகுதியில் உள்ள இவரது வாடகை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பட்டுப் புடவைகள், பித்தளை சாமான்கள், 1 பவுன் செயின் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் கதிர்வன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சில நாட்களாக மீஞ்சூர் பகுதியில் கொள்ளை, வழிப்பறி,  இருசக்கர வாகனம்  திருட்டு போன்ற குற்றச் செயல்கள் நடப்பது தொடர் கதையாக உள்ளது. மேலும், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு ஐஸ்வர்யா நகர், கொரஞ்சூர் ரெட்டிபாளையம், மவுத்தும்பேடு செப்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சுற்றுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். எனவே குற்றச் செயல்களை தடுக்க, இரவு நேரத்தில் மீஞ்சூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponneri , Robbery by breaking the lock of a trader's house near Ponneri: Request for police patrolling
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்