×

குமரி ஆபாச பாதிரியாரை காவலில் எடுத்து தீவிர விசாரணை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) மீது, நர்சிங் மாணவி ஒருவர் அளித்த பாலியல் ரீதியான தொந்தரவு தொடர்பான புகார் அளித்தார். அதன்பேரில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை, கடந்த 19ம்தேதி போலீசார் கைது செய்தனர். அவரை ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் கோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில், நாகர்கோவில் சிறையில் இருந்த பாதிரியார், கடந்த 23ம்தேதி பாளை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த, சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக , நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1 ல் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 1 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். அதன் பேரில் நேற்று மாலை பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீசார் காவலில் எடுத்தனர். பாளை சிறையில் இருந்து அவரை, பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் கொண்டு வந்தனர். நாகர்கோவிலில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வைத்து பாதிரியாரிடம் விசாரணை நடந்தது. ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இளம்பெண்களுடனான தொடர்பு குறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். பாதிரியார் பணியாற்றிய தேவாலயத்துக்கும் அவரை அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

இந்த விசாரணைக்கு பின், இன்று மாலை மீண்டும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை பாளை சிறைக்கு கொண்டு செல்கின்றனர். இதற்கிடையே ‘தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள், குமரி மாவட்டம்’ என்ற பெயரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ படத்துடன் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து திருமண விழா ஒன்றில் மணமக்கள் படத்துடன் பிளக்ஸ் போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் போலீசார் மணமகன் மற்றும் பிளக்ஸ் வைத்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Kumari obscene priest taken into custody and intensive investigation
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...