×

மகளிர் சுய உதவி குழுக்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் வழங்க நடவடிக்கை: இந்தாண்டு 30 ஆயிரம் கோடி கடன் இலக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி(பாமக) பேசுகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக் குழுவினரின் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.

21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022 - 23ம் நிதி ஆண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 25,219 ஆயிரம் கோடி ரூபாய் சுய உதவி குழுக்களுக்கு கடனனுவி அளித்துள்ளோம். இதன் மூலம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளன.

இந்த நிதி நிலையான அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் தான் முதல் முதலாக மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவி அரசும், முதலமைச்சரும் இதை கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Help ,Minister ,Udhayanidhi Stalin ,India , Action to disburse loans within 15 days of application by women self-help groups: 30 thousand crore loan target this year Information from Minister Udayanidhi Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...