×

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

வாஷிங்டன்: இந்திய நீதிமன்றத்தில் உள்ள ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற பெயரை குறிப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதேவேளையில், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமீனும் வழங்கியது.

இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும் ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறும் போது, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும். இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்து சுதந்திரம் உட்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பகிர்கிறோம் என்றார்.

Tags : Rahul Gandhi ,US State Department , Rahul Gandhi, Case, USA, Statement
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...