×

எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: எஸ்.பி.வேலுமணியின் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த  எஸ்.பி. வேலுமணி சென்னை மாநகராட்சியிலும் கோவை மாநகராட்சியிலும் உள்ள பணிகளுக்கு முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.58 கோடி  அளவுக்கு சொத்து சேர்த்ததாக  தி.மு.கவின் ஆர்.எஸ். பாரதியும், அறப்போர் இயக்கமும் புகார் அளித்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்துசெய்ய மறுத்தது. அதேவேளையில் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அதேப்போன்று தமிழக அரசு தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தபோது எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பதியப்பட்ட ஒன்றாகும்.

சொத்து குவிப்பு தொடர்பான எந்த விவரமும் இல்லை’’ என கூறினார். இதற்கு கடும் எதிப்பு தெரிவித்த   தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் மற்றும் அரிஸ்டாட்டில், ‘‘எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு முறையான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்டது’’ என தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் எஸ்.பி.வேலு மணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்ததோடு,  எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Tags : SB ,Velumani ,Supreme Court , Asset accumulation case against SB Velumani cannot be quashed: Supreme Court dismisses appeal
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...