×

நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசு துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட  டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில்  ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.  அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள  தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான்.  

ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால்  அதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய  35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது  உறுதி செய்யப்பட்டது. நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். எனவே,  இதுகுறித்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tags : Ramdas , 700 people who wrote the land surveying exam at one center should be investigated if there was any malpractice: Ramdas insists
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...