பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். பல்லாவரம் ரேடியல் சாலையில் ஏராளமான தனியார் கட்டுமான நிறுவனங்கள், பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வருகின்றன. இங்கு மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக இரவு நேரங்களில் சாலைகளில் தனியாக செல்லும் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து வந்தது.
நேற்று முன்தினம் இரவும் அதே போன்று பணி முடிந்து சாலையில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுவோசர்தார்(22) என்ற இளைஞரை வழி மறித்த கும்பல் ஒன்று அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறக்க முயற்சி செய்தது.
சுவோசர்தார் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் தங்களிடம் இருந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் அடித்து சரமாரியாக தாக்கி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது. காயமடைந்த அவரை மீட்ட சக தொழிலாளர்கள், உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், வடமாநில இளைஞரை தாக்கி, செல்போனை பறித்துச் சென்றது, ஜமீன் பல்லாவரம், ஏரிக்கரை தெருவை சேர்ந்த விமல் ராஜ் (21), புருஷோத்தமன் (19) மற்றும் காமராஜர் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(21) என்பது தெரிய வந்தது. நேற்று தங்களது வீடுகளில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து சுவோசர்தாரிடம் பறித்த செல்போன் மீட்கப்பட்டது. 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இரவு நேரங்களில் இது போன்ற குற்றங்களை தடுக்கும் வகையில் பல்லாவரம் ரேடியல் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.