சென்னை: குடோனில் 15 கிலோ வெடி மருந்து வைத்திருக்க அனுமதி பெற்றுவிட்டு, 300 கிலோ அளவுக்கு வெடி மருந்தை பதுக்கியதே விபத்துக்கு காரணம் என்பது வருவாய் துறை விசாரணையில் தெரியவந்தது. காஞ்சிபுரம் குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில், நரேந்திரன் என்பவரின் பட்டாசு ஆலையில், கடந்த வாரம் ஏற்பட்ட வெடி விபத்தில் மொத்தம் 9பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன்(50), ஜெகதீசன்(35) ஆகியோர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில், வெடி விபத்துக்கான காரணம் குறித்து வருவாய் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பட்டாசு ஆலைகளில் ஒரு நாளுக்கான உற்பத்தி 15 கிலோ அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆலையில் 300கிலோ வெடி மருந்து வைத்திருந்துள்ளனர். மேலும் பட்டாசு தயாரிக்கும் மூல பொருட்களும் அதிகளவில் இருந்துள்ளது. விபத்தின்போது இவை இணைந்த காரணத்தால் இறப்பு எண்ணிக்ைக அதிகரித்தது. மேலும், அனுபவம் இல்லாத பணியாளர்களை அதிகமாக பணிக்கு நியமித்ததுமே காரணம் என்று வருவாய் துறையானது பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தமிழக அரசுக்கு விளக்க அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது.