×

தமிழக சட்ட பேரவையில் கருப்பு உடையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம்: ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து நடத்த திட்டம்

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று இரவு கருப்பு உடையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக, குஜராத் நீதிமன்றம் கடந்த 24ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதை தொடர்ந்து, ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவரின் எம்பி பதவி பறிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

தீர்ப்பு வெளியான அன்று, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து, தலைமை செயலகம் முன்பாக உள்ள பிரதான சாலையில் பிரதமர் மோடியை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடக்கிறது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வர உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டமன்றத்துக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்துக்கு வரவேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசுவதற்கு சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

Tags : Congress ,Tamil Nadu ,Legislative Assembly ,Rahul Gandhi , Congress MLAs sit-in in black in Tamil Nadu Legislative Assembly tonight: Plan to protest Rahul Gandhi's sacking of MPs
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்