சென்னை: சென்னை மாநகராட்சியில் 2016ம் ஆண்டுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் 6 ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளிட்டு வந்தனர். ஆன்லைனிலும் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் திமுக வெற்றி மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ் குமாரும் பதவி ஏற்றனர். இவர்கள் பதவி ஏற்ற பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இந்நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் 27ம் தேதி (இன்று) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நடைப்பெற உள்ளது.
இதில், இந்த ஆண்டுக்கான வரவு செலவு கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும் மேயர் பிரியா முன்னிலையில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயதாஸ் தாக்கல் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து 28ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். கூட்டத்தின் இறுதியில் 2023-24ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இந்த பட்ஜெட்டில் புதிதாக 70 புதிய அறிவிப்புகளும், பல அதிரடி திட்டங்களும் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.