×

பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைப்பு: 20 நாளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது

திருமலை: தனியார் பள்ளி ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு ஏரிக்கரையில் நிர்வாணமாக புதைக்கப்பட்டார். அவரை காதலித்து கொலை செய்த ஆட்டோ டிரைவரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பொண்டலவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். நர்பாலாவில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. பள்ளிக்கு தினமும் நடிமிட்டோட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்வாலி (30) என்பவரின் ஆட்டோவில் சென்று வந்தார். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

அப்போது திருமண ஆசை காட்டி ஜாபர்வாலி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். நீண்ட நாட்களாக காதலித்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கேட்டுள்ளார். அதற்கு ஜாபர்வாலி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்துள்ளார். தொடர்ந்து இளம்பெண் வற்புறுத்தியதால் சந்திப்பதை தவிர்த்துள்ளார். போன் மூலமும் தொடர்பு கொள்ளாதபடி செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டாராம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இளம்பெண், ஜாபர்வாலியின் வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கிருந்த அவரது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யும் தெரிவித்துள்ளார். அதற்கு உறவினர்கள், ஜாபர்வாலிக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அவர்கள் கேட்டனர். அப்போதுதான் ஜாபர்வாலிக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. இதைக்கேட்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் தன்னை 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவரை நான் எனது வீட்டுக்கு செல்லாமல் இங்கேயே இருப்பேன் என்று கூறி கதறி அழுதுள்ளார். அவரை ஜாபர்வாலியின் உறவினர்கள் ஆறுதல் கூறி அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜாபர்வாலி, காதலியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தனது திட்டத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த 20 நாட்களுக்கு முன் காதலிக்கு போன் செய்து உன்னை இந்து முறைப்படியே திருமணம் செய்துகொள்கிறேன். நாம் அடிக்கடி சந்திக்கும் புக்கராயசமுத்திரம் செருவுகட்டாவில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வா என அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய இளம்பெண் ஜாபர்வாலியுடன் சென்றார். அங்கு மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருக்கும்படி கூறியுள்ளார். அதற்கு இளம்பெண், திருமணம் செய்தபிறகுதான் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, ஜாபர்வாலி, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த துணிகளை கழற்றி அங்குள்ள ஏரிக்கரையில் சடலத்தை புதைத்துவிட்டு தப்பியுள்ளார்.

மேலும் கொலையை தற்கொலையாக மாற்ற முயன்ற ஜாபர்வாலி, அந்த பெண்ணின் போனில் இருந்து அவரது தங்கைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் ‘நான் ஒருவரை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய எதிர்ப்பு ஏற்படும் எனக்கருதி நான் செருவுகட்டாவில் உள்ள சாய்பாபா கோயில் அருகே தற்கொலை செய்து கொள்கிறேன். எல்லாருக்கும் குட்பை’ என மெசேஜ் அனுப்பினார்.

மகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்து பெற்றோர் அவரை தேடி வந்தனர். மேலும் போலீசிலும் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த மெசேஜ் வந்ததால் சந்கேமடைந்து மீண்டும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் ஜாபர்அலி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று அவரை பிடித்து விசாரித்தபோது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர்வாலி கொடுத்த தகவலின் பேரில் ஏரிக்கரையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி எடுத்தனர். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அனந்தபூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.  இதையடுத்து ஜாபர்வாலியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Teacher raped and killed, buried naked on lake shore, auto driver arrested
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...