×

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது 'எல்.வி.எம்3-எம்3'ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக் கோள்கள், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகின்றது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இதில், வணிகரீதியான செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்கள் கடந்த அக்.23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், 2-வது கட்டமாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்கள் இன்று (26.03.2023) காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகின்றது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

36 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் பூமியில் இருந்து சுமார் 450 கி.மீ. தூரத்தில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. சந்திரயான்-2 உள்ளிட்ட முக்கிய ஏவுதல் திட்டங்களில் எல்விஎம்-3 ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.

Tags : 'LVM3-M3' rocket will fly into the sky today at 9 am with 36 telecommunication satellites!
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...