×

அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது: தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி பேட்டி!

டெல்லி : நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேசக்கூடாது என்பதற்காகவே தன்னை தகுதி நீக்கம் செய்து இருப்பதாகவும் இது போன்ற செயல்களை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டேன் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து முதன்முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசியதாவது,இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. நான் ஒரே ஒரு கேள்வி தான் எழுப்பினேன்.. அதானி.. நான் தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க போராடுவேன்.

அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார்? அதானி இந்த பணத்தை நேரடியாக வாங்கவில்லை ?.இது உட்கட்டமைப்பு சார்ந்த தொழில். எங்கிருந்து இந்த பணம் வந்தது?.யார் இந்த பிணத்தை கொடுத்தது?. இது என்னுடைய முதல் கேள்வி. இந்த ஷெல் நிறுவனங்கள் பாதுகாப்புத்துறைக்கு வேலை செய்கின்றன. இந்த நிறுவனங்களில் சீன நாட்டினருக்கு பங்கு இருக்கிறது.யார் அந்த சீனர்கள் என்பது குறித்து யாரும் கேள்வி கேட்காதது ஏன் ?. பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?.அதுகுறித்த புகைப்படத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினேன்.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் திசை திருப்பவே முயற்சிப்பார்கள். சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்;என்னைப் பற்றி இவர்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை.எனது பெயர் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி; காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டான்.அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார்; அந்த பயம் அவரது கண்களிலேயே தெரிந்தது; அதனால்தான் இந்த தகுதி நீக்கம்..நான் நாடாளுமன்றத்தில் இருக்கிறேனா, இல்லையா என்பது குறித்து கவலையில்லை; என்னை நிரந்தரமாக தகுதிநீக்கம் செய்தாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்,என்றார்.


Tags : adani ,modi ,rakulkandi , Satellite, LVM3-M2, Rocket, Countdown
× RELATED ரெய்டு நடத்தி எனது பிரசாரத்தை...