ஏற்காடு: ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் போகன்வில்லா மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் வீடுகள் மற்றும் சாலையோர பகுதிகளில் ஏராளமான வெளிநாட்டு வகை மலர் செடிகள், மரங்கள் நடவு செய்யபட்டுள்ளது. சீசனுக்கு ஏற்ப இந்த செடிகளில், பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். அந்த வகையில், ஏற்காடு சுற்று வட்டார பகுதிகளில் கோடையை வரவேற்கும் விதமாக இளஞ்சிவப்பு வண்ணங்களில் போகன்வில்லா வகை மலர்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.
தென் அமெரிக்க நாடுகளை தாயகமாக கொண்டது போகன்வில்லா. இவ்வகை மரங்கள், ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. இளஞ்சிவப்பு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இவ்வகை பூக்களால், ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் போகன்வில்லா மலர்களை கண்டுரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.