×

மணலி - அரியலூர் சாலை சந்திப்பில் மூதாட்டி எரித்து ெகாலை?: கால்வாயில் சடலம் மீட்பு

திருவொற்றியூர்: சென்னை மணலி - அரியலூர் சாலை சந்திப்பில், சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் நேற்று எரிந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, மூதாட்டி உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த மூதாட்டி மணலி சி.பி.சி.எல் நகரை சேர்ந்த வடிவாம்பாள் (73) என்பது தெரிந்தது. இவரது கணவர் ராஜமாணிக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிப்பதால், வடிவாம்பாள் மட்டும் தனியாக வசித்து வந்ததும் தெரிந்தது.

தகவலறிந்த ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார், செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து, ஆவடி தடயவியல் துறை சார்பாக நிர்மலா, சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும், மூதாட்டி ஆடைகள் கலையப்பட்டு கிடந்ததாகவும், நாக்கு கடித்த நிலையில்  இருப்பதால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Manali - Ariyalur road , Manali - Ariyalur Road Junction Burned Old Woman?: Dead Body Rescued in Canal
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...