
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 22ம் தேதி 540 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து, சிங்கள கடற்படையினர் விரட்டி உள்ளனர். அதேபோல் கடந்த 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 255 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். 23ம் தேதி அதிகாலை இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்கு உரியது. இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்களை விடுவிக்கவும், மீன்பிடி படகுகளை மீட்கவும் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.