சென்னை: சென்னை மாநகரில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பேசுகையில், “புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய மயிலாடுதுறை பகுதியில் மின் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. அவற்றை குறைக்க புதைவட மின்கம்பிகளாக மாற்ற வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பெரம்பூர் மற்றும் ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், அடையார் கோட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதலாக 7 கோட்டங்களில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெற்ற பின்பு முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறையை அரசு பரிசீலிக்கும்.
