திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கிராமங்களில் டிரோன் மூலம் மறுஆய்வு சர்வே பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு சிறப்பு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு தலைமைச் செயலாளர் சாய் பிரசாத் காணொளி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் இணை கலெக்டர்களுடன் மறு ஆய்வு சர்வே நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு தலைமைச் செயலாளர் சாய் பிரசாத் கூறியதாவது:
மாநிலத்தில் நடைபெற்று வரும் நில மறு ஆய்வு சர்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறித்த காலக்கெடுவுக்குள் டிரோன் மூலம் நில அளவை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை கற்கள் நடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ட்ரோன் வான்வழிப் பயணத்தை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். எல்லை உறுதிப்படுத்தல், பகுதி சரிபார்ப்பு, கணக்கெடுப்பு முடித்தல் மற்றும் இறுதி வருவாய் பதிவேடு ஆகியவை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
மறு ஆய்வு பணியின் ஒரு பகுதியாக திருப்பதி மாவட்டத்தில் 250 கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் மறுஆய்வு பணி முடிந்து மீதமுள்ள பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களிலும். காலக்கெடுவுக்குள் தரை உண்மையாக்கும் பணியையும் முடிக்க வேண்டும் என்றார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடரமணா, இணை கலெக்டர் பாலாஜி, மாவட்ட வருவாய் அதிகாரி சீனிவாசராவ், மாவட்ட சர்வே அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.