×

தமிழ்நாடு மீனவர்கள் கைது!: சிங்களப்படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு நிரந்தர முடிவு கட்ட ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!!

சென்னை: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழ்நாடு மீனவர்களை அவர்களின் படகுகளுடன் உடனடியாக  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது.  சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த 12-ஆம் நாள் தான் தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக அடுத்த அத்துமீறலை சிங்களக் கடற்படையினர்  நிகழ்த்தியிருப்பது சற்றும் மனிதநேயமற்ற செயலாகும். வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க  அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால் ஆகும். அதை நடுவண் அரசு அனுமதிக்கக்கூடாது. வங்கக்கடலில் சிங்களப் படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை அவர்களின் படகுகளுடன் உடனடியாக  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Anbumani ,Union Government ,Sinhalese Army , Fishermen, Arrest, Sinhalese Force, Trespass, United Government, Anbumani
× RELATED ஹோலி பண்டிகை கட்சித்தலைவர்கள் வாழ்த்து