காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இயங்கும் 3 வெடி பொருள் குடோன்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தைத் தொடர்ந்து, வெடிபொருள் குடோன்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நரேந்திரன். இவர், காஞ்சிபுரம் அருகே குருவிமலை வலத்தோட்டம் வசந்தம் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில், காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்களது வேலையில் ஈடுபட்டிருந்தபோது பகல் 11 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியதால் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயத்துடன் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
இதையடுத்து காஞ்சிபுரம் பாட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியான விவகாரத்தில் குடோன் உரிமையாளர் நரேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் இயங்கும் 3 வெடி பொருள் குடோன்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.