×

விருதுநகரில் இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா பூங்கா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: இந்தியாவின் முதல் பி.எம். மித்ரா பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் நேற்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில், இந்தியாவில் முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசிற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே மேற்கொள்ளப் பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவானது மொத்தம் ரூ.2,000 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் மூலம் உருவாக்கப்படும். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி, உடனடியாக தொழில் தொடங்க ஆயத்த தொழிற் கூடங்கள், தொழில் பணியாளர்களுக்கான வீடுகள், காற்றாலை மற்றும் சூரிய தகடு மின் உற்பத்தியை உள்ளடக்கிய பசுமை ஆற்றல், பூஜ்ய கழிவு வெளியேற்றக்கூடிய பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்ற சிறப்பு வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்கா முழு அளவில் செயல்படும் போது சுமார் 2,00,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும், என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ரூ.1,231 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6,315 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் அனைத்து வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்களும் தொழில் முனைவோர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன்,  ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், ஒன்றிய இணை அமைச்சர்கள் எல்.முருகன், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, ஒன்றிய ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் ரச்சனா ஷா, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : India ,PM ,Mitra Park ,Virudhunagar ,Chief Minister ,M. K. Stalin , India's first PM Mitra Park in Virudhunagar in the presence of Chief Minister M K Stalin MoU with 11 companies
× RELATED I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு..!!